Asianet News TamilAsianet News Tamil

காட்டடி அடித்த விஜய் சங்கர் - ரிஷப் பண்ட்!! நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இளம் வீரர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் இளம் வீரர்கள் விஜய் சங்கரும் ரிஷப் பண்ட்டும் அதிரடியில் நியூசிலாந்து அணியை தெறிக்கவிட்டனர்.
 

vijay shankar and rishabh pant threatening new zealand bowlers
Author
New Zealand, First Published Feb 10, 2019, 3:31 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் இளம் வீரர்கள் விஜய் சங்கரும் ரிஷப் பண்ட்டும் அதிரடியில் நியூசிலாந்து அணியை தெறிக்கவிட்டனர்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ - சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது. 

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார். இஷ் சோதி வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார் விஜய் சங்கர். மூன்றாம் வரிசையில் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடித்து ஆடி மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்தார் விஜய் சங்கர். 

vijay shankar and rishabh pant threatening new zealand bowlers

அதற்கடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், முதல் பந்திலேயே பவுண்டரியும் அடுத்த 2 பந்துகளிலுமே சிக்ஸர் என முதல் 3 பந்துகளில் 16 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியை அச்சுறுத்தினார். இஷ் சோதியின் 10வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அதிரடியாக ஆடி 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். 

vijay shankar and rishabh pant threatening new zealand bowlers

அதன்பிறகு களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, ரிஷப்பாவது முதல் பவுண்டரிதான் அடிப்பான்.. நான் சிக்ஸரே அடிப்பேன் தெரியும்ல என்கிற ரீதியில் முதல் பந்திலேயே சிக்ஸரடித்து நியூசிலாந்து அணியை மேலும் அச்சுறுத்தினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட நியூசிலாந்து வீரர்கள் ஆடித்தான் போய்விட்டனர். ரோஹித் சர்மா 38 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிவந்த ஹர்திக்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனியும் அவுட்டாக தினேஷ் கார்த்திக்கும் குருணல் பாண்டியாவும் ஆடிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios