அணியில் சேரணும்னா நட்சத்திர ஹோட்டலுக்கு பெண்களை அனுப்ப வேண்டுமா..? ஆடியோ வெளியீட்டால் ஆட்டம் கண்ட பெரிய தலைகள்
உத்தர பிரதேச மாநில அணியில் மீண்டும் சேர வேண்டுமென்றால், பாலுறவுக்கு பெண்களை தயார் செய்து தர வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் கேட்டதாக இளம் வீரர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தலைவராக இருப்பவர் ராஜீவ் சுக்லா. இவரது உதவியாளர் முகமது அக்ரம் சைஃபி. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா என்பவர், தன்னை மீண்டும் உத்தர பிரதேச மாநில அணியில் சேர்த்துக்கொள்ள டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பெண்களை அனுப்பிவைக்குமாறு கேட்டதாக, அக்ரம் சைஃபி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான ஆடியோ பதிவு ஒன்றை இந்தி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் முகமது அக்ரம் சைஃபி, பிசிசிஐ-யில் ஊதியம் பெறும் பணியாளராக உள்ளார். எனினும் அவர், உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் கிரிக்கெட் சங்கத்தில் அக்ரம் சைஃபி எந்த பொறுப்பிலும் இல்லை. எனினும் சங்கத்தில் அவர் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். அதை பயன்படுத்தி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அக்ரம் சைஃபி. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அக்ரம் சைஃபி, எனக்கு பெண்களை அனுப்பிவைத்ததாக ராகுல் சர்மா கூறுவது பொய். அப்படி செய்திருந்தால் அவர் அணியில் ஆடுவது சரியா? கிடையாது. ராகுல் சர்மா மாநில அணியிலோ ஜூனியர் அணியிலோ ஆடியது கிடையாது. நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய நபர்களுடன் பணிபுரிவதால் பல பகுதிகளிலிருந்தும் என் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளில் 15 நபர்களுக்கு தொடர்பிருக்கிறது. அப்படியே இருந்தாலும் கூட, 2015ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து அப்போதே சொல்லாமல் இப்போது குற்றம்சாட்டப்படுவதன் காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள ராஜீவ் சுக்லா, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.