நாங்க புனே போய் விசில் போடப் போறோம் !! மேட்ச் பார்க்க உற்சாகமாய் புறப்பட்ட சென்னை ரசிகர்கள்….
புனேயில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காகச் சென்னையில் இருந்து ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனால் சென்னை ரசிகர்கள் அந்த விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளிக்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை ராஜஸ்தான் அணியுடன் நடைபெறும் போட்டியைக் காண ஆயிரம் ரசிகர்கள் செல்வதற்காக ஐஆர்சிடிசி மூலம் ஒரு சிறப்பு ரயிலையே சி.எஸ.கே ஏற்பாடு செய்தது.
18பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இன்று காலை 8.40மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
ரசிகர்களுக்கான ரயில் கட்டணம், புனேயில் தங்கும் செலவு, உள்ளூர்ப் போக்குவரத்து, சென்றுவரும் நாட்களில் உணவுக்கான கட்டணம், போட்டிக்கான கட்டணம் அனைத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சரான இந்தியா சிமென்ட் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
புனே சென்று வரும் சிறப்பு ரயிலுக்கான கட்டணம் மட்டும் 23லட்ச ரூபாய் ஆகும். இது தவிர ரயிலில் சேதம் ஏதாவது ஏற்படுத்தப்பட்டால் அதற்கு இழப்பீடு பெறுவதற்காக வைப்புத் தொகையும் இந்தியா சிமென்ஸ்ட் நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில் சென்னை சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர்.