உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது செனகல்; போலந்து அணிக்கு மரண அடி...
போலந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியின் குரூப் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து - செனகல் அணிகள் இடையிலான ஆட்டம் மாஸ்கோ ஸ்பார்டக் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
ஆட்டம் தொடக்கத்தில் போலந்து அணியின் கை ஓங்கி இருந்தது. எனினும் செனகல் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சாடியோ மேன் தலைமையில் வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்படி, 38-வது நிமிடத்தில் செனகல் வீரர் மேன் பந்தை கடத்தி சக வீரர் இட்ரிஸா குயேவுக்கு அனுப்பினார். அதைத் தடுத்து போலந்து வீரர் தியாகோ சியோனக் வெளியில் அடிக்க முயன்ற போது, கோல்கம்பத்துக்குள் சென்று சேம்சைட் கோலானது.
பின்னர் சாடியோ மேனுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலடிக்க முயன்றும் முடியவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் செனகல் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் போலந்து நட்சத்திர வீரர் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி கோலடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால், 60-வது நிமிடத்தில் செனகல் முன்கள வீரர்கள் மியாங் நியாங் அற்புதமாக கோலடித்தார். இதனால் 2-0 என செனகல் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிய சிறிது நேரம் இருக்கையில் 86-வது நிமிடத்தில் போலந்து வீரர் கிரகோர்ஸ் கியோசோவியக் ப்ரீ கிக் ஆறுதல் கோல் அடித்தார்.
ஆட்டத்தின் இறுதியில் செனகல் அணி 2-1 என போலந்தை வீழ்த்தி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.