நாட்டை விட உலகக் கோப்பையா முக்கியம் ? கொந்தளித்த அசாருதீன், ஹர்பஜன் சிங் !!
இனி எந்தக் காலத்திலும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட கூடாது என அசாருதீனும் , ஹர்பஜன் சிங்கும் வலியுறுத்தியுள்ளனர். நம் நாட்டைவிட உலகக் கோப்பை முக்கியமில்லை என்றும் அவர்கள் கொந்தளித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்துள்ளது . இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் பொது மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் 2019 உலகக் கோப்பை போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டியில் விளையாடுவது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாதான் முதலில், அதன் பிறகு தான் விளையாட்டு எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் பேசுகையில், ஒரு கிரிக்கெட் வீரராக தேசத்தைவிட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முக்கியமானதாக பார்க்கவில்லை.
முதலில் நாம் இந்தியர்கள், பின்னர்தான் நாம் கிரிக்கெட் வீரர்கள். தேசத்தால்தான் நாம் இப்போது இந்நிலையில் உள்ளோம். இந்தியாவிற்காக நாம் விளையாடுவதால் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள் என கூறினார்.
பாகிஸ்தான் உடனான இருதரப்பு போட்டியை புறக்கணித்த இந்தியா, உலக கோப்பையிலும் விளையாடக்கூடாது. “இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை என்றால், மற்ற பகுதிகளிலும் விளையாடமலே இருக்கலாம். ஹர்பஜன் சிங் பேச்சை நான் ஆதரிக்கிறேன். தேசத்தைவிடவும் உலக கோப்பை முக்கியமானதாக இருக்க முடியாது” என அசாருதீனும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம சூடு பிடித்துள்ளது.