மியாமி ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் போஸ்னியா வீரரை சந்திக்கிறார் யூகி..
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி, போஸ்னியா வீரரான மிர்ஸா பேசிச்சை சந்திக்கிறார்.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் யூகி பாம்ப்ரி தனது 2-வது தகுதிச்சுற்றில் ஸ்வீடனின் எலிஸ் ஒய்மேயருடன் மோதி 7-5, 6-2 என்ற செட்கணக்கில் வென்றார்.
யூகி - எலிஸ் மோதியது இது 2-வது முறையாகும். முன்னதாக, அப்டோஸ் டென்னிஸ் போட்டியில் 2015-இல் இருவரும் மோதிய ஆட்டத்தில் எலிஸ் ஒய்மேயர் வென்றிருந்தார்.
தற்போது பிரதான சுற்றுக்கு முன்னேறிய பாம்ப்ரி அதில் போஸ்னியாவைச் சேர்ந்த உலகின் 75-ஆம் நிலை வீரரான மிர்ஸா பேசிச்சை சந்திக்கிறார்.
மிர்ஸா பேசிச்சை யூகி எதிர்கொள்வது இது 2-வது முறை. கடந்த 2016 சோஃபியா டென்னிஸ் போட்டியில் இருவரும் மோதியபோது யூகியை வீழ்த்தியிருந்தார் மிர்ஸா.
யூகி இந்த முதல் சுற்றில் வெல்லும் பட்சத்தில், தனது 2-வது பிரதான சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சாக்கை எதிர்கொள்வார்.
அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - பிரான்ஸின் எட்வர்ட் வாசெலின் இணை தங்கள் முதல் சுற்றில், பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ - ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஜோடியுடன் மோதுகின்றனர்.