இந்தியாவை எதிர்த்து ஆடும் இங்கிலாந்து; 19 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து ஆடும் குர்ரன் சகோதரர்கள்...
20 ஓவர் போட்டித் தொடரில் இந்தியாவை எதிர்த்து ஆடும் இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து ஆட இருக்கிறார்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் ஆட இருக்கிறது. அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் கலந்து கொள்கிறது.
இந்த இரண்டு அணிகளுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் மோதும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், இங்கிலாந்து அணியில் ஆல்–ரௌண்டர்களான சகோதரர்கள் சாம் குர்ரன், டாம் குர்ரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
இருவரும் சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் இருவரும் ஒரே போட்டியில் களம் இறங்கினால், 1999–ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நேரத்தில் சர்வதேச போட்டியில் களமிறங்கும் ''இங்கிலாந்து சகோதரர்கள்" என்ற சிறப்பை பெறுவார்கள்.
இங்கிலாந்து சார்பில் ஆடப்போகும் வீரர்கள்:
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி.