உங்களால தான் எல்லாமே.. புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த “தல” தோனி
புனே ஆடுகளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சென்னை கேப்டன் தோனி.
இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனில் களம் கண்டது. அதனால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான போராட்டத்தால், சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள், புனேவிற்கு மாற்றப்பட்டன. புனே மைதானத்தை சென்னை அணி, சொந்த மைதானமாக கருதி ஆடிவந்தது.
புனேவில் ஆடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்ற சென்னை அணி, மொத்தம் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனே மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்குக்கும், பந்துவீச்சுக்கும் சமஅளவில் ஒத்துழைத்ததற்கு ஆடுகளத்தை நன்கு பராமரித்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இதை நன்கு அறிந்த சென்னை அணி கேப்டன் தோனி, ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்குப் பரிசளிக்க விரும்பினார்.
இதையடுத்து, நேற்று போட்டி தொடங்கும் முன் ஆடுகளப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சென்னை அணி சார்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பரிசளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்தப் படத்தை பரிசளித்தார். தோனியின் செயலால் ஊழியர்கள் நெகிழ்ந்தனர்.