உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல் முதலாக கால்பதித்து வரலாறு படைத்தது சீனா…
உலகக் கோப்பை வலைகோல் பந்தாட்ட்ப் போட்டிக்கு முதல் முறையாக சீனா அணி தகுதிபெற்று வரலாறு படைத்து அசத்தியுள்ளது.
சர்வதேச வலைகோல் பந்தாட்ட சம்மேளன விதிகளின்படி, கண்டங்களில் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
இந்தாண்டில் இலண்டனில் நடைபெற்ற "வலைகோல் பந்தாட்ட உலக லீக் அரையிறுதி போட்டியில் 8-வது இடம் பிடித்த சீனாவுக்கும், 9-வது இடம் பிடித்த தென் கொரியாவுக்கும் இடையே உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை பெறுவதற்கான போட்டி நடைப்பெற்றது.
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்ட போட்டியில் வெல்வது தென் கொரியாவுக்கான கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால், சூப்பர் 4 ஸ்டேஜ் சுற்றில் மலேசியா - தென் கொரியா இடையேயான ஆட்டம் 1-1 என சமனானதால் அதிக புள்ளிகள் பெற்றிருந்த மலேசியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறிற்று.
தென் கொரியா தனது கடைசி வாய்ப்பை இழந்ததால், உலகக் கோப்பை போட்டியில் சீனா பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டியில் 15-வது அணியாக சீனா தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது கொசுறு தகவல்.