இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகிறார் தமிழர்..?
இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் சந்தித்த எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இதையடுத்து புதிய தேர்வுக்குழு விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி பிசிசிஐ-யின் பொதுக்குழு கூடவுள்ளது. அதில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த தேர்வுக்குழுவில் அர்ஷத் அயூப்(ஹைதராபாத்), வெங்கடேஷ் பிரசாத்(கர்நாடகா), ரோஹன் கவாஸ்கர், தீப் தாஸ்குப்தா, அகார்கர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.