பிங்க் பந்தில் நல்லா ஆடணுமா..? இந்திய வீரர்களுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் அறிவுரை
இந்திய அணி முதன்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில், இரவு நேரத்தில் பந்து நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக சிவப்பு நிறத்திற்கு பதிலாக பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில், கொல்கத்தா ஈடன் கார்டனில் முதன்முதலில் இந்திய அணி ஆடவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் பிங்க் நிற பந்துதான் பயன்படுத்தப்படவுள்ளது. கூக்கபரா பந்துகள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் எப்போதும் பயன்படுத்தப்படும் எஸ்ஜி நிறுவன பிங்க் நிற பந்துகளே பயன்படுத்தப்படுமென உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
தற்போதைய இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் பெருபாலானோர் பிங்க் நிற பந்தில் ஆடியதில்லை. எனவே அவர்களுக்கு இது புது அனுபவமாகத்தான் இருக்கும். ஷமி, சஹா, ரோஹித் ஆகிய வீரர்கள் துலீப் டிராபியில் பிங்க் பந்தில் ஆடியுள்ளனர். அதுவும் அதிகமாக ஆடியதில்லை. ஆனால் இந்திய அணியில் இல்லாத, மற்ற சில உள்நாட்டு வீரர்கள் துலீப் டிராபியில் பிங்க் நிற பந்தில் ஆடியுள்ளனர்.
எனவே இந்திய வீரர்கள் பிங்க் நிற பந்தில் எப்படி ஆடுவது, அந்த பந்தின் தன்மை ஆகியவை குறித்து பிங்க் பந்தில் ஆடிய வீரர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், பிங்க் பந்துகள் 20 ஓவரில் எப்படி இருக்கின்றன, 50 ஓவரில் அதன் தன்மை என்ன, 80 ஓவரில் எப்படி இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். எனவே ஒவ்வொரு சூழலிலும் அது எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
துலீப் டிராபியில் பிங்க் பந்துகளில் ஆடிய வீரர்களிடம் இந்திய வீரர்கள் ஆலோசனையை பெற வேண்டும். அது கண்டிப்பாக அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.