மிக துல்லியமாக கணித்த லட்சுமணன்.. பெரிய தீர்க்கதரிசிதான் போங்க
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில், விவிஎஸ் லட்சுமணனின் கணிப்பு நிஜமாகியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் இரட்டை சதம், ரஹானேவின் சதம் மற்றும் கடைசி நேர உமேஷ் யாதவின் அதிரடியால் 497 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி 130 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. லிண்டேவும் நோர்ட்ஜேவும் இணைந்து ஆடிவருகின்றனர்.
இந்த போட்டியில் இந்திய அணி முக்கியமான மூன்று விக்கெட்டுகளை 39 ரன்களுக்கே இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோஹித் சர்மா, தனது பொறுப்பை உணர்ந்து ரஹானேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் இந்த இன்னிங்ஸில் 212 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டமுடிவில் ரோஹித் சர்மா 117 ரன்கள் அடித்திருந்தார். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் மழையால் பாதிக்கப்பட்டது. ஆட்டம் முடிந்ததும், வர்ணனையாளர்கள் லட்சுமணன் மற்றும் ஸ்மித்திடம், ரோஹித் இந்த இன்னிங்ஸில் எத்தனை ரன் அடிப்பார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லட்சுமணன், 212 ரன்கள் என பதிலளித்தார். ரோஹித் சர்மா கரெக்ட்டாக 212 ரன்கள் அடித்து அவுட்டானார். லட்சுமணன் மிக துல்லியமாக கணித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமணன் கணிப்பு எப்போதுமே தவறாகாது என்று அவரை ஆகாஷ் சோப்ரா புகழ்ந்துள்ளார்.