ரிஷப் பண்ட்டுக்கு லெஜண்ட் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்கக்கராவின் அறிவுரை
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான தோனியின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது. இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார்.
ரிஷப் பண்ட் தனது கெரியரின் தொடக்கத்தில்தான் இருக்கிறார். ஆனால் இப்போதே அவர் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுகிறார். தோனி என்பவர் மிகப்பெரிய லெஜண்ட். அவருடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது சரியாக இருக்காது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் ஆரம்பத்தில் படுமோசமாக சொதப்பினாலும் இப்போது தேறிவருகிறார்.
அவர் கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாததும், தோனியின் இடத்தை உடனடியாக அவர் நிரப்ப வேண்டும் என்ற மனப்பான்மையில் விமர்சனங்கள் எழுவதுமே அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய ரிஷப் பண்ட்டும் அதை செய்வதில்லை. தனது நெருக்கடியை மண்டைக்கு ஏற்றி, தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது சூழலுக்கு ஏற்றவாறு அணியின் தேவைக்கு ஏற்ப ஆடுவதா என்பது புரியாமல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்புகிறார்.
பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டிலுமே இரண்டிலுமே ரிஷப் பண்ட் சொதப்பிவருகிறார். அவர் மீதான அழுத்தம், அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவிடாமல் தடுக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தவறாக ரிவியூ எடுக்க வலியுறுத்திய ரிஷப் பண்ட், இரண்டாவது போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார்.
ரிஷப் பண்ட்டுக்கு உலகின் பல முன்னாள் விக்கெட் கீப்பர்களும் ஜாம்பவான்களும் தங்கள் அறிவுரைகளை வழங்கிவருகின்றனர். ஆஸ்திரேலிய லெஜண்ட் ஆடம் கில்கிறிஸ்ட் தனது அறிவுரையை வழங்கிய நிலையில், இலங்கை லெஜண்ட் குமார் சங்கக்கராவும் தனது அறிவுரையை வழங்கியுள்ளார்.
ரிஷப் பண்ட் குறித்து பேசிய சங்கக்கரா, ரிஷப் பண்ட் விஷயங்களை ரொம்ப சிக்கலாக்கி கொள்ளாமல் அவரது பலவீனங்களை அறிந்து அதைக்களைய கடுமையாக உழைக்க வேண்டும். அவரது பலவீனங்களை அறிந்து அதில் மேம்பட உழைக்க வேண்டும். அதன்பின்னர் அழுத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திட்டமிட்டு ஆடவேண்டும்.
யாராவது ஒருவர் ரிஷப் பண்ட்டுடன் அமர்ந்து பேச வேண்டும். அவரை அழுத்தத்திலிருந்து வெளிக்கொண்டுவந்து அவரது இயல்பான ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். ஒரு விக்கெட் கீப்பராக அவர் மிகவும் நேர்த்தியாக செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர் ரிவியூ எடுப்பதில் கேப்டனுக்கு உதவ முடியும். அந்த வகையில், கேப்டனுக்கு சரியான வகையில் உதவுவதற்கும், அவரது ரோலை அவர் புரிந்துகொள்வதற்கும் டி20 உலக கோப்பை ரிஷப் பண்ட்டுக்கு ரொம்ப முக்கியம் என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.