கேஎல் ராகுல் பொறுப்பான பேட்டிங்.. அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா
விஜய் ஹசாரே தொடரில் இன்று நடந்த இரண்டு காலிறுதி போட்டிகளில் ஒன்றில், டெல்லி அணியை குஜராத் வீழ்த்திய நிலையில், மற்றொரு போட்டியில் புதுச்சேரி அணியை வீழ்த்தி கர்நாடக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அணிக்கும் புதுச்சேரி அணிக்கும் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய புதுச்சேரி அணி 50 ஓவரில் 207 ரன்கள் அடித்தது. புதுச்சேரி அணி வெறும் 41 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சாகர் திரிவேதியும் விக்னேஷ்வரன் மாரிமுத்துவும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்து புதுச்சேரியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க உதவினர். 50 ஓவர் முடிவில் புதுச்சேரி அணி தட்டுத்தடுமாறி 207 ரன்களை அடித்தது.
208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 95 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த படிக்கல், சரியாக 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரோஹன் கதமும் சிறப்பாக ஆடினார். தொடக்கம் முதலே அவசரப்படாமல் இலக்கை விரட்டுவதில் மிகக்கவனமாக இருந்த ராகுல் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 90 ரன்களை குவித்து 10 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹனும் கேப்டன் மனீஷ் பாண்டேவும் இணைந்து 41வது ஓவரிலேயே இலக்கை எட்டினர். ரோஹன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் அடித்திருந்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்ற கர்நாடக அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.