பெண்களை மதிக்க வேண்டியது நமது பொறுப்பு !! தசரா விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு !!
இந்த தீபாவளியில் நாம் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளில் டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறும்.
இதையொட்டி அங்கு ராவணனை ராமர் வதம் செய்ததை நினைவூட்டும் வகையில், ராவணனின் உருவ பொம்மைக்கு தீவைத்து எரிப்பது வழக்கம். தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியைக் காண அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் சமயத்தில் விஜயதசமியன்று, உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. தண்ணீர், இந்தியாவின் வளங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும், உணவை வீண் செய்யக் கூடாது என்றும் நாம் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
கடந்த 9 நாட்களாக நாம் துர்கையை வழிபட்டோம். இதை மேலும் முன்னெடுத்துச் சென்று நாம் அனைவரும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கி செயல்படுவோம். இந்த தீபாவளியில் நாம் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம். இது நமது லக்ஷ்மி வழிபாடாக இருக்கலாம் என கூறினார்..
பண்டிகைகளுக்கான இடம்தான் இந்தியா. பல கலாசாரங்களைக் கொண்டுள்ளதால், இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் எப்போதும் ஒரு பண்டிகை கொண்டாடப்படும். அனைத்து பண்டிகைகளும் நமது சமுதாயத்தை ஒன்றிணைக்கிறது என மோடி தெரிவித்தார்.