அம்மாவுக்கு களங்கம் ஏற்படுத்த வேணாமேனு அமைதியா இருக்கோம்..! கொதித்தெழுந்த வெற்றிவேல்..!
ஜெயலலிதா சிகிச்சை பெற்றதன் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் அவற்றை வெளியிட்டு ஜெயலலிதாவிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக வெளியிடவில்லை எனவும் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதை ஒட்டி பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தீவிரமடைந்துள்ளது பிரசாரம் மட்டுமல்ல. பணப்பட்டுவாடாவும்தான். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா படு ஜோராக நடைபெறுகிறது. ஆங்காங்கே சிலர் லட்சக்கணக்கிலான பணத்துடன் சிக்குவதைக் கண்டும் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி பணப்பட்டுவாடா செய்யப்படுவதை கண்டும் தேர்தல் ஆணையமே மிரண்டு நிற்கிறது.
இந்நிலையில், பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாகவும் பணப்பட்டுவாடாவைத் தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவுடனான சந்திப்புக்குப் பீறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், அதிமுகவினர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆர்.கே.நகரில் 2 லட்சம் ஓட்டுகள் உள்ளன. ஓட்டுக்கு 6000 ரூபாய் என 125 கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் பட்டுவாடா செய்துவருகின்றனர். தினகரனை தோற்கடிப்பதற்காகவே ஆட்சியாளர்கள் ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்து வருகின்றனர் என வெற்றிவேல் குற்றம்சாட்டினார்.
அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளன. உடல்நலக் குறைவு காரணமாக உடல் மெலிவுற்று சாதாரண உடையில் ஜெயலலிதா இருந்தார். அதனால் அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என வைத்துள்ளதாக வெற்றிவேல் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் மகாநடிகர்கள். வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டுமே ஜெயலலிதாவின் ஆட்சி, மாண்புமிகு அம்மா என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் உண்மையாகவே ஜெயலலிதாவின் ஆட்சி கிடையாது. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உத்தரவு வேறு இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது. அதன்படி அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என வெற்றிவேல் விமர்சித்தார்.