டி.டி.வி.தினகரன் - விவேக் இடையே மீண்டும் மலர்ந்த நெருக்கம் !! குடும்ப விழாவில் நெகிழ்ச்சி !!
அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஆகியோர் இடையே நிலவி வந்த பனிப்போர் குடும்ப விழா ஒன்றில் முற்றுப் பெற்றுள்ளது. விவேக்கின் மனைவிக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியால் இரு குடும்பங்களும் மீண்டும் நெருங்கியுள்ளன.
கடந்த 20 ஆம் தேதி விவேக் மனைவி கீர்த்தனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் தாஜ் கன்னிமரா ஹோட்டலில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை டிடிவி தினகரன் வீடு தேடிப் போய் விவேக் கொடுத்துள்ளார். . ஆனால் அன்று தினகரன் பரமக்குடி, ராமநாதபுரம் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவர் வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து தினகரனின் மனைவி அனுராதாவும், இளவரசியின் மகளும் விவேக்கின் சகோதரியுமான கிருஷ்ணப்பிரியாவும்தான் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார்கள். கீர்த்தனாவுக்கு அலங்காரம் செய்வது, பூச்சூட்டுவது, சந்தனம் தடவுவது என்று வளைகாப்பு நிகழ்ச்சியை முன்னின்று அனுராதாவும், கிருஷ்ணப்பிரியாவும் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசியல் ரீதியாக தங்க தமிழ் செல்வன் மட்டும்தான் கலந்து கொண்டார். ஆனால் திவாகரன் குடும்பத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை .
விவேக்குக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியை இளவரசி கடந்த மாதம் பரோலில் வந்தபோது பேசி முடித்துவிட்டதாகவும், அதில் இருந்தே ஜெயா டிவியில் தினகரனுக்கான முக்கியத்துவம் பழையபடி அதிகரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விவேக்கின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி தினகரன் –விவேக் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது மட்டுமல்லாமல் நெருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.