சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழா !! பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி பிரதமர் அஞ்சலி !!
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு நர்மதா ஆற்றங்கரையில் அமைந்துள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர்.
படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது.
இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று, பிரதமர் மோடி படேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.