அதிமுக.,வில் பிளவோ கருத்து வேறுபாடோ இல்லை : அடித்துச் சொல்கிறார் தம்பிதுரை!
அதிமுக.,வில் எந்த வித பிளவும் இல்லை, எவருக்கும் கருத்து வேறுபாடும் இல்லை என்று அடித்துக் கூறினார் துணை சபாநாயகர் தம்பிதுரை.
திருச்சிக்கு வந்திருந்த தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவரிடம் சில கேள்விகளைக் கேட்டனர். தில்லிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்றது குறித்தும், அதிமுக.,வில் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளதா என்பது பற்றியும் கேள்வி எழுப்பினர்.
அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தம்பிதுரை, அதிமுகவில் எந்தவித பிளவோ, கருத்து வேறுபாடோ கிடையாது என்று கூறினார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்தித்ததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என அவரே கூறியுள்ளார் என்று தெரிவித்த தம்பிதுரை,
இரட்டை இலை சின்னத்தைப் பெற ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பெற்றது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி துணை சபாநாயகர் என்கின்ற முறையில் எந்தவிதமான கருத்தும் சொல்ல இயலாது என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், மிக விரைவில் இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த தம்பிதுரை, தற்போதைய எடப்பாடி பழனிச்சாமீ அரசு, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனியாக தில்லி சென்றது தொடர்பாக தமிழகத்தில் கேலியாகப் பேசப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு என்றும், எடப்பாடியைக் குறித்த புகார்களை வாசிக்கவே ஓபிஎஸ் அங்குச் சென்றதாகவும் கூறப்பட்டது. இந்தக் கருத்தை மறுக்கும் விதமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இவ்வாறு பேசியுள்ளார்.