100 % நம்பிக்கை இருக்கு - மார்த்தட்டும் அமைச்சர் ஜெயக்குமார்...
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம் எனவும், இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என 100% நம்பிக்கை இருப்பதாகவும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அணி ஒபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. இதையடுத்து நாங்களே உண்மையான அதிமுக என கூறி இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சசிகலா சிறைக்கு சென்றதால் கட்சியை துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் வழிநடத்தினார்.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்திற்கு இரு தரப்பும் போட்டியிட்டதால் தேர்தல் ஆணையம் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கியது.
இதைதொடர்ந்து எடப்பாடிக்கும் டிடிவிக்கும் முட்டிக்கொள்ளவே ஒபிஎஸ் பக்கம் சாய்ந்தார் இபிஎஸ். இதனால் எடப்பாடி அமைச்சர்களால் வெளியேற்றப்பட்டார் டிடிவி.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல ஒபிஎஸ் இபிஎஸ்சுடன் கைகோர்த்தார்.
இதையடுத்து டிடிவி தலைமையில் ஒரு புதிய அணி உருவாகி உள்ளது. இதனால் கட்சி எங்களுக்கே சொந்தம் எனவும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர் டிடிவி அணியினர்.
ஆனால் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி டீம் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இதன் நகலை இன்று எடப்பாடி அணியினர் ஜெயக்குமார், சிவி சண்முகம், மைத்ரேயன், முனுசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் வழங்கினர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம் எனவும், இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என 100% நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.