வைகோவும், திருமாவும் பெரிய தலைவலியா மாறப் போறாங்களாம்!! ஸ்டாலினுக்காக பரிதாபப்படும் தமிழிசை !!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியா மாறப்போவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு க் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கஜா புயல் நிவாரணத்தை பல எதிர்க்கட்சிகள் அரசியலாக்கிவருகின்றனர். திருச்சியில் அத்தனை பேரை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள், நிவாரணப் பணிகளையும் இவ்வளவு பேரை அழைத்துச் சென்று செய்திருக்க வேண்டியதுதானே” என்று விமர்சித்தார்.
மேகதாட்டு பிரச்சினை குறித்து பாஜகவுக்கு கவலையில்லாதது போல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றனர் என்று குற்றம் சாட்டிய தமிழிசை, “காவிரியாக இருந்தாலும், மேகதாட்டுவாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை பாஜக போராடும் என்றார்.
எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது, அதில் செந்தாமரையை மலரச் செய்வோம். தாமரை மலர்கிறதா இல்லையா என்பது குறித்து இவர்களுக்கு என்ன பதற்றம் என்று தெரியவில்லை என விமர்சித்த தமிழிசை, திமுக கூட்டணி குறித்தும் கருத்து தெரிவித்தார்.
“வைகோ முதலில் துரைமுருகனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அன்பழகனின் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது வன்னியரசு ஒரு பதிவை இட, அதற்காக திருமாவளவனிடம் சண்டையிட ஆரம்பித்தார். ஆனால் அது கட்சியின் கருத்தல்ல என்று திருமாவளவன் கூறிவிட்டார். இவர்களின் சண்டையும், இவர்களை கூட்டணியில் வைத்திருப்பதும் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறப் போகிறது என தமிழிசை தெரிவித்தார்.