தாஜ்மஹால் சிவன் கோயில்: அதை “தீஜோ மஹால்” என பெயர்மாற்ற வேண்டும்.... பா.ஜனதா எம்.பி. பேச்சால் மீண்டும் சர்ச்சை
ஆக்ராவில் உள்ள உலகஅதியங்களில் ஒன்றான தாஜ்மஹால் உண்மையில் சிவன் கோயிலாக இருந்தது. அதை முகலாய மன்னர்கள் இடித்து விட்டனர். அதை “திஜோ மஹால்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. வினய் கத்தியார் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தாஜ்மஹாலை முன்வைத்து கடந்த சில நாட்களாக சர்ச்சையை கிளப்பும் வகையில் பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகின்றனர். உத்தரப்பிரதேச அமைச்சர் சங்கீத் சோம் சமீபத்தில் பேசுகையில், “ தாஜ்மஹால் அடிமைத்தனத்தின் அடையாளம்” எனத் தெரிவித்திருந்தார். உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், இந்தியர்கள் வியர்வையாலும்,ரத்தத்தாலும் கட்டப்பட்டது என்று பேசினார்.
இதற்கு பதில் கருத்தாக சமாஜ்வாதி தலைவர் ஆசம் கானும், மஜ்லிஸ்-இ-இத்தெஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்.) கட்சி தலைவர் ஒவாய்சியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. வினய் கத்தியார், தாஜ்மஹால் இந்து கோயில் என இன்று சர்ச்கைக்குறிய கருத்தைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது-
தாஜ்மஹால் ஒரு காலத்தில் சிவன் கோயிலாக இருந்து. அங்கு சிவன் கோயிலுக்கான ஏராளமான அடையாளங்கள் இருக்கின்றன. முன்னொரு காலத்தில் அதற்கு பெயர் “திஜோ மஹால்” என்று பெயர். தாஜ்மஹாலின் கோபுரத்தில் இருந்து சிவலிங்கத்தின் மீது நீர் சொட்டுசொட்டாக விழும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. அதை முகலாயமன்னர்கள் அகற்றவிட்டனர். எந்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டிய அவசியம் இல்லையே. தாஜ்மஹாலின் பெயரை “திஜோ மஹால்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட நமது அடையாளங்களை அழிக்கவில்லை, ஆனால், முகலாயர்கள் அழித்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவரின் பேச்சு தாஜ்மஹால் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.