இரட்டை இலை யாருக்கு? பிரதமர் மோடியைக் குழப்பிய சுப்பிரமணியன் சாமி..!
முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் பாஜக மற்றும் அதிமுக மேல்மட்டத்தில் குழப்பம் உருவாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக முக்கிய பங்காற்றுகிறது. இரட்டை இலை சின்னத்தை முதல்வர் பழன்சாமி அணிக்கு வழங்க சொல்லி பிரதமர் மோடியை வலியுறுத்தும் மத்திய அமைச்சர்களில் முதன்மையானவர் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
எனவே அருண் ஜேட்லியைப் பிடிக்காத பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது.
அருண்ஜெட்லி உதவியுடன் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டால் பழனிசாமி அரசு வலிமையடையும். மேலும் தமிழக அரசியலில் அருண் ஜேட்லி மறைமுகமாக கோலோச்சுவார்.
இதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் சுப்பிரமணியன் சாமியின் திட்டம். அதற்காக சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்த சு.சாமி, அதிமுகவை வழிநடத்தக்கூடிய சக்தி, சசிகலா தரப்புக்குத்தான் உள்ளது என வலியுறுத்தியுள்ளார். ஒற்றை தலைமையின் கீழ் மட்டுமே இதுவரை அதிமுக இயங்கியது. அதையே அக்கட்சியின் தொண்டர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் கட்சியை வழிநடத்தும் சக்தி பழனிசாமி அணிக்கு கிடையாது. ஆட்சி அதிகாரம் இருப்பதால் மட்டுமே கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள்.
எனவே என்ன செய்தாலும் எதிர்காலத்தில் அதிமுக, சசிகலாவிடம்தான் செல்லும். ஆகவே, இரட்டை இலை சின்ன விவகாரத்தில் பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என சு.சாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகவும் இதனால் பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.