டி.டி.வி. கட்சியில் இணைகிறார் கேரளாவின் ஆட்டம் பாம் !! சரிதா நாயர் சநதிப்பால் பரபரப்பு !!
கேரளாவில் கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது சோலார் பேனல் ஊழல் வழக்கில் சிக்கி முதலமைச்சர் உம்மன் சாண்டியை உலுக்கி எடுத்த சரிதா நாயர் விரைவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சரிதா நாயர் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சரிதா நாயர் என்றாலே கேரளாவில் சோலார் பேனல் ஊழல் வழக்கில் சிக்கி காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சாண்டியை உண்டு, இல்லை என்று பணணியவர். இந்த ஊழலில் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பல பகீர் தகவல்களை வெளியிட்டார். இதனால் உம்மன் சாண்டியின் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது.
சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயர்.பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணையின் போது உம்மன்சாண்டி மீது செக்ஸ் புகாரும் கூறினார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினர்.
இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் , குமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்கினார்.
பின்னர் தற்போது தக்கலையில் பேப்பர் கப் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அவர் இப்போது தமிழக அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமரி மாவட்டத்தில் தங்கி இருக்கும் சரிதா நாயருக்கு சில அரசியல் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று திடீரென நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு சென்றார்.
அவரை சந்தித்து பேசிய சரிதா நாயர் பச்சைமாலுக்கு சால்வை அணிவித்ததோடு, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் கேட்டார்.
இதற்கு ஒப்புக்கொண்ட பச்சைமால் இந்த தகவலை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிப்பதாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்பு முடிவை கூறுவதாகவும் தெரிவித்தார். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர், இப்போது தமிழக அரசியலில் கால் பதிக்க நினைப்பது இங்குள்ள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.