சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் மூன்று நாட்களுக்கு நீடிப்பு… கேரள அரசு அதிரடி…
சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தி்ல் ஏற்கனவே போடப்படிருந்த 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நீடித்து பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு உத்தரவிட்டுள்ளார். பம்மை, இதே போல் நிலக்கல், சன்னிதானம், இலவங்கல் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.
இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில இன்று ஐயப்பன் கோயிலுக்கு இரண்டு பெண்கள் செல்ல முயன்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஆகியோர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களும், மேல் சாந்திகளும் அவர்களை போகவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சபரிமலைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பற்றத்தையும் கூட்டியது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து,சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹ் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்