ஆட்சிக்கு வந்தா விவசாய கடன் ரத்து!! ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தங்களது முதல் வாக்குறுதியை அதிரடியாக அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை முழு வீச்சில் தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் தலைநகர் பாட்னாவில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய ராகுல்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசுகள் பதவியேற்ற வெறும் பத்தே நாளில் விவசாய கடன்களை அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளோம்.
தற்போது பீகார் விவசாயிகளை மோடி மிகவும் இழிவுபடுத்தியுள்ளார். விவசாயிகளை இழிவுபடுத்தினால் அவர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள், விவசாயிகள் தங்களுக்கு பிஜேபி வேண்டாம் என்றும் காங்கிரஸ்தான் என்று கூறி வருகின்றனர்.
தொடர்ந்துப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு விவசாயப் புரட்சி, வெண்மை புரட்சி, தொழிநுட்ப புரட்சி ஆகியவற்றை தந்தது. அப்படியிருக்க கடந்த ஐந்தாண்டுகளாக மோடியின் ஆட்சி அம்பானி, நீரவ் மோடி ஆகிய கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைத்த உடன் நாட்டின் ஏழை எளியவர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்வோம் என்று கூறினார்.