அம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..!
பணத்தை திருடுவதற்கு முன் பிக்பாக்கெட் கவனத்தை திசை திருப்புவது போல் பிரதமர் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் என மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மகாராஷ்டிராவின் யாத்வமாலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி அப்போது பேசியதாவது: அதானி, அம்பானியின் (தொழில்அதிபர்கள்) ஒலிபெருக்கியின் மோடி, அவரின் ஒரே வேளை பிக்பாக்கெட் பணத்தை திருடுவதற்கு முன் மக்களின் கவனத்தை திசை திருப்புவது போல் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதுதான். அப்போதுதான் உங்க பணத்தை குறிப்பிட்ட தொழில்அதிபர்களுக்கு அவரால் கொடுக்க முடியும்.
மக்களை திசை திருப்புவதன் மூலம் சங்கடமான கேள்விகளை தவிர்க்க பிரதமர் மோடி எப்போதும் முயற்சி செய்கிறார். சந்திரயான் மிஷன், சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து பேசும் மோடி, விவசாயிகள் நிலை மற்றும் வேலையின்மை, ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு என்ற இரட்டை தாக்குதலால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதுகெலும்பை உடைத்தது, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் குறித்து எதுவும் பேசமால் தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்.
ரபேல் விமான ஒப்பந்தம் வாயிலாக ரூ.35 ஆயிரம் கோடி திருடப்பட்டுள்ளது. ஊடகங்கள் அது குறித்து எழுவது இல்லை. ஏனென்றால் அவற்றை தொழில்அதிபர்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளனர். உங்கள் பணம் ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் மோடியை விளம்பரபடுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.