எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? - ராகுல் காந்தி அதிரடி கேள்வி ?
பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லா திருடர்களின் பெயர்கள் முடிவிலும் மோடி என்று வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
17 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதனையொட்டி பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மோடி பிரச்சரத்தில் ஈடுபட்டார். இதே போல், நேற்று தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தியும் தேனி, சேலம், மதுரை போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
இதையடுத்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் 100 சதவிகிதம் திருடர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மோடி ரூ.30 ஆயிரம் கோடியை அவரது நண்பரான அம்பானிக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் 100 சதவிகிதம் மக்களின் பணத்தைத் திருடிவிட்டீர்கள் என்பது உண்மையே என்று குறிப்பிட்டார்..
நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன் என்று பேசிய ராகுல், ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது. அது நீரவ் மோடியாகட்டும், லலித் மோடியாகட்டும், நரேந்திர மோடியாகட்டும். இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை என கடுமையாகப் பேசினார்.
நீரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி ஆகிய அனைவரும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய ராகுல் பிரதமர் தனது பிரச்சாரத்தின் போது வேலையின்மை, விவசாயிகள் மற்றும் ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதியம் நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதியளித்த ராகுல் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றார்