பிரஷர் குக்கர் கடைசியில காயலான் கடைக்குத்தான் போகும்…. டிடிவி தினகரனை கலாய்த்த அமைச்சர் ஜெயகுமார் !!!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிடுவது அதிமுகவை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும், இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் அதே நேரத்தில் பிரஷர் குக்கர் கடைசியில் இருப்புக்கடைக்குத்தான் போகும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி கட்சிகள் இத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சுயேட்சையாக பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் தொப்பி, விசில், கிரிக்கெட்பேட் சின்னங்களில் ஏதாவது ஒன்றை தனக்கு ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் வழங்கியுள்ளது.
இதையடுத்த டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி ஆர்.,கே.நகர் தொகுதியில் வீதி,வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பிரஷர் குக்கர் ஒதுக்கப்பட்டதும் துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் தேர்ந்தெடுத்தோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதே போன்று அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு, பிரஷர் குக்கர் பிரஷர் எந்த பிரஷரும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
அந்த பிரஷர் குக்கர் கடைசியில காயலான் கடைக்குத்தான் போகும் என கூறி கலாய்த்தார்.