Asianet News TamilAsianet News Tamil

வகையாய் சிக்கிய பாமக!! கிழித்தெறிந்த முரசொலி... பதிலடியால் பதறவிட்ட தாறுமாரு கேள்விகள்?

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையின் மீது அனேக தமிழக கட்சித் தலைவர்கள் எதிர்மறைக் கருத்துகள் தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆளுநர் உரையின் பல அம்சங்களை வரவேற்று அறிக்கை தந்தார்.  அதிமுகவை பாமக தடவிக்கொடுப்பதாக  அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. 

PMK Answer to DMK's Murasoli paper
Author
Chennai Central, First Published Jan 12, 2019, 9:06 PM IST

இதனையடுத்து இன்று முரசொலியில் சில கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. அதிமுகவின் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் போன்றோர் பொருளாதார இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தாலும் வாக்கெடுப்பின் போது அவையில் இருந்து எதிர்க்காமல் வெளிநடப்பு செய்து வழக்கமான தங்களுடைய இரட்டை வேடத்தைக் காட்டிக் கொண்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்ல, இதே பிரச்சினையில் பாமகவின் நிலைப்பாடு பற்றியும் முரசொலி சுட்டிக் காட்டியுள்ளது. “சமூக நீதி எங்கள் உயிர் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லும் பாமக, நாடாளுமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கவில்லை. அதுமட்டுமல்ல, எந்தப் பிரச்சினையானாலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடும் பாமக நிறுவனர் , 10 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. பாமக- பாஜக கூட்டணிக்கான அச்சாரமா இந்த சமிக்ஞை?” என்று கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி. 

இதற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி  அறிக்கையில் பதிலளித்துள்ளார். அதில், “எந்தப் பிரச்சினையிலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடுபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்ற உண்மையையும், சமூக நீதி எங்கள் உயிர் என்று பாட்டாளி மக்கள் கட்சி மூச்சுக்கு முந்நூறு சொல்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொண்ட முரசொலி நாளிதழுக்கு நன்றி. அதேநேரத்தில் திமுக தலைமை மற்றும் முரசொலி நாளிதழின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஜனவரி 7&ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தான் கசிந்தன. ஓரளவு விவரம் வெளியான போது நேரம் மாலை 4.00 மணி. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அன்று மாலை 4.37 மணிக்கு அறிக்கை வெளியிட்டார். ‘‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு: சமூக நிலையே சரியான அளவீடு!’’ என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் முடிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எந்தெந்த

வகைகளில் எல்லாம் எதிராக அமைந்துள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் இந்த ஒதுக்கீடு நிலைக்காது என்பதையும் மருத்துவர் அன்புமணி கடந்த கால உதாரணங்களுடன் விளக்கியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ள ஜி.கே.மணி டாக்டர் ராமதாசின் எதிர்ப்பு பற்றியும் கூறுகிறார்.

“அதேநேரத்தில் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து மருத்துவர் அய்யா அவர்கள் இரு டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார். ‘‘ பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று ஒரு டுவிட்டர் பதிவிலும், மற்றொரு டுவிட்டர் பதிவில்,‘‘உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றும் மருத்துவர் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 10 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஓர் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை இதைவிட சிறப்பாக யாரும் தெளிவுபடுத்த முடியாது.

ஆனால், இந்தப் பிரச்சினையில் பா.ம.க. கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறுபவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்பது தெரியவில்லை.

உண்மையில் 10% இட ஒதுக்கீடு குறித்த மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியான ஜனவரி 7-ஆம் தேதி மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி ஆகிய

இருவரைத் தவிர வேறு எவரும் கருத்து தெரிவிக்க வில்லை. சமூகநீதிக்காக பொங்கும் முரசொலி இதழை நடத்தும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு அடுத்த நாள் 8-ஆம் தேதி தான் சட்டப்பேரவையில் இது குறித்து பேசினார். 7ஆம் தேதி இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை.

10% இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏன் வாக்களிக்கவில்லை என்று வினா எழுப்பப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு முடிவை அவசரம், அவசரமாக அறிவித்த மத்திய அரசு, அதே வேகத்தில் மக்களவையில் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைக்கப் பட்டிருந்ததாலும், அந்த

நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் 3 மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்ததாலும் அவரால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதைத் தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார் ஜி.கே.மணி.

அதேநேரம் பாஜகவுடன் கூட்டணியா என்ற முரசொலியின் கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். “பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு அச்சாரம் போடுவதற்காகத் தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை பா.ம.க. எடுத்திருப்பதாக திமுக கூறுகிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று பா.ம.க. ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் வகையில் நல்ல முடிவை மருத்துவர் அய்யா எடுப்பார்.

அதேநேரத்தில் திமுக தலைமை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின்

இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வாக்களித்தன. சமூகநீதிக்கு எதிராக இந்தக் கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா? என்பதை திமுக தலைமை அறிவிக்க வேண்டும்” என்று அந்த பதிலிலும் ஒரு கேள்வியை வைத்து முடித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios