இடைக்கால நிதி அமைச்சரானார் பியூஸ் கோயல் !! மோடி அதிரடி !!
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக உள்ள அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அவர் அமெரிக்கா சென்றுள்ளதால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
தற்போது 200 க்கும் மேற்பட்ட நிதி அமைச்சக அதிகாரிகள் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இது தொடர்பாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக அருண் ஜெட்லி இதில் கலந்து கொள்வார்.
ஆனால் அவர் அமெரிக்கா சென்றுள்ளதால் அன்று பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்களே இதில் பங்கேற்றனர். தற்போது அருண் ஜெட்லி தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், பிரதமர் மோடி பியூஸ் கோயலை இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த் , பியூஸ் கோயலை இடைக்கால நிதி அமைச்சராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வரும் 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.