இழுத்தடிக்கும் பழனிசாமி... கண்டுகொள்ளாத பன்னீர்செல்வம்..! அதிருப்தியில் சீனியர்கள்..! அடுத்தது என்ன?
அரசுப் பதவிகளில் அமர்த்துவதாகக் கூறி அணிகளை இணைத்துவிட்டு தற்போது எந்தவிதமான பதவியும் அளிக்கப்படாததால் பன்னீர்செல்வம் ஆதரவு சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சியிலிருந்து விலகி பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி தனித்து செயல்பட்டது. பின்னர் பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைக்கப்பட்டது.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியில் உள்ள சீனியர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்குவதாகக் கூறி பழனிசாமி தரப்பு பன்னீர்செல்வம் அணியை இணைத்துக்கொண்டது. அதை மையமாக வைத்தே சீனியர்களை சமாதானப்படுத்தி பழனிசாமி அணியில் இணைத்தார் பன்னீர்செல்வம்.
பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் மற்ற சீனியர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. பதவி வழங்கப்படும் என அவர்கள் காத்திருந்தனர். ஆனால் காத்திருப்பு மட்டுமே நேர்ந்தது. எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக பன்னீர்செல்வத்திடமோ பழனிசாமியிடமோ முறையிடாமல் கே.பி.முனுசாமியிடம் சீனியர்கள் புலம்புகின்றனர். இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தனக்கு அதிகாரம் வழங்கப்படாதது தொடர்பாக மட்டும் டெல்லிக்கு சென்று பிரதமரிடம் முறையிடும் பன்னீர்செல்வம், எங்களைப் பற்றியும் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றியும் கவலைப்படுவதே இல்லை.
எனவே அவரிடம் பேசுங்கள் அல்லது முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து பேசுங்கள் என பன்னீர்செல்வம் ஆதரவு சீனியர்கள், கே.பி.முனுசாமியிடம் புலம்பித் தள்ளுகின்றனர்.
தானும் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறும் முனுசாமி அவர்களிடம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவது வரை பொறுமையாக இருந்து அதன்பிறகு என்ன செய்வது என அவர்கள் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.