தமிழ் ஆய்வு இருக்கைக்கு அள்ளி வழங்கிய ஓபிஎஸ்… எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைப்பதற்கு தனது சொந்தப் பங்காக 10000 அமெரிக்க டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஹூஸ்டனில் உள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கு தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
ஹூஸ்டன் தமிழ ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் சார்பாக நடத்தப்பட்ட விழாவில், துணை முதலமைச்சர் கலந்து கொண்ட தினம், ஓபிஎஸ் டே என அறிவிக்கப்பட்டது.
மேலும் பத்மினி ரங்கநாதன் டிரஸ்ட் சார்பில் பண்பின் சிகரம் என்ற பட்டமும், மெட்ரோபெளக்ஸ் தமிழ் சங்கம் சார்பாக வீரத்தமிழன் பட்டமும் துணை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஹூஸ்டன் இந்திய தூதரக அலுவலகத்தில், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குனர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார்.
அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்கான ‘Houston Tamil studies chair electronic donor wall’ –ஐ துவக்கி வைத்தார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைப்பதற்கு தனது சொந்தப் பங்காக 10000 அமெரிக்க டாலர் வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்