பச்சையாய் புளுகும் ராமதாஸ்... பட்டா - சிட்டாவை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் அதிரடி..!
மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் அசுரன் படம் பார்த்து விட்டு, ’பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்’ எனப்பாராட்டி இருந்தார் மு.க.ஸ்டாலின்.
அதற்கு பதிலளித்து இருந்த ராமதாஸ், ’பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் முரசொலி நிலம் குறித்து விளக்கமளித்துள்ள மு.க.ஸ்டாலின், ‘’நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை’’ எனத் தெரிவித்ததுடன் பட்டாவையும் வெளியிட்டுள்ளார்.