மிஸ்டர் மோடி…. 13 பேர் உயிருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ? நீங்க வாய திறக்க மாட்டீங்களா ? பொளந்து கட்டிய பாஜக எம்.பி. !!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். இப்பிரச்சனை குறித்து மோடி ஏன் வாய் திறக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸ் சுட்டுக்கொன்றது வேதனையளிக்கிறது, வெட்கப்பட வேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது. காட்டுமிராண்டித்தனமானது என தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் ஜனநாயக ஆட்சியில்தான் வாழ்கிறோமா? அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா?. அமைதியான முறையில் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது எந்தஒரு எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கி மூலம் போலீஸ் தாக்குதல் நடத்தி உள்ளது. மக்களை கொன்ற இந்த படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களை கொலை செய்தவர்கள் மற்றும் காரணமானவர்களை கொடூரமாக தண்டிக்க வேண்டும். இந்த படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன், நீதி கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்தும் பதில்கள் வராத நிலையில் ஏராளமான கேள்விகள் எழுகிறது. பிரதமர் மோடி அவர்களே இப்போது நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் பேசவில்லை.
தூத்துக்குடியில் இரக்கமற்ற முறையில் மக்கள் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை. எப்போதுதான் வாய் திறந்து பேசப் போறீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள்! இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் தோரணைப் பேச்சை இப்போது நாங்கள் கேட்க முடியுமா? என குறிப்பிட்டு உள்ளார்.