மு.க.ஸ்டாலினுக்கு நாகரிகம் வராது... திருந்தவே மாட்டார்... பாமக பதிலடி..!
தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழும். மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது. அவர் திருந்தமாட்டார்
முரசொலி நாளிதழில் அரசியல் அறம் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தங்களுக்கு ஒன்றும் அறிவுறுத்த வேண்டாம். பராசக்தி படத்தில் தங்கள் தலைவர் கருணாநிதி நீதிமன்ற காட்சி ஓன்று மூலம் தங்களுக்கு போதித்துள்ளது.
ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க-வுடனும், தி.மு.க-வுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார். பா.ம.க-வுக்கு சட்டப் பேரவையிலும் உறுப்பினர் இல்லை; நாடாளுமன்றத்திலும் உறுப்பினர் இல்லை. அ.தி.மு.க போட்ட பிச்சையைப் பெற்று மகனை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அவருக்கு அமைச்சர் பதவியை ராமதாஸ் கேட்பதாக’கட்டுரை வெளியிட்டு இருந்தது.
இதற்கு பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பதிலடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதி, ‘’மு.க.ஸ்டாலின் எந்தக் காலத்திலும் திருந்த மாட்டார்; அரசியல் நாகரிகம் அவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.
சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது தகுதிக் குறைவு இல்லை. மாறாக ஓர் அரசியல் கட்சி நேர்மையாக இருப்பது தான் முக்கியம். அந்த நேர்மை பா.ம.க-விடம் இருக்கிறது. மக்களவையில் பா.ம.க-வுக்கு உறுப்பினர் இல்லை என்று கூறும் தி.மு.க-வுக்கு 1989, 1991, 2014-ஆம் ஆண்டுகளில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள்? தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த தி.மு.க-வுக்கு 1991-ல் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள்? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?
பிரதமரைச் சந்திப்பதே அமைச்சர் பதவி கோருவதற்காகத் தான் என்பது தி.மு.க வகுத்த இலக்கணம். பா.ம.க-வுக்கு அந்த வழக்கம் இல்லை. ஆனால், 2009-ஆம் ஆண்டில் இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதற்காக இரங்கல் கூட தெரிவிக்காமல் டெல்லியில் முகாமிட்டு பதவிப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் யார்? என்பதை தமிழக மக்கள் அறிவர்.
ஆனால், ஒன்று மட்டும் உறுதி. தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழும். மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது. அவர் திருந்தமாட்டார்’’என தெரிவித்துள்ளார்