அவரு அமைச்சர் பதவி கிடைக்காத வயிற்றெறிச்சலில் பேசுறாருங்க!!
தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பேசிவருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் தினகரனின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். தினகரனுக்கு ஆதரவாக பழனிசாமி அரசை விமர்சிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இவர்கள் தான்.
இந்நிலையில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான(தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ) செந்தில் பாலாஜி, பழனிசாமி அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், 30 நாட்களில் பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் எனவும் பழனிசாமி சிறைக்கு செல்வார் எனவும் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். மேலும் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
செந்தில் பாலாஜியின் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இப்படியெல்லாம் பேசுகிறார் என பதிலளித்தார்.