ஸ்டாலினை விட்டுட்டீங்க...! எங்களை மட்டும் ஏன் கலாய்க்கிறீங்க!? சீரியஸா கேட்கும் செல்லூர் ராஜு...
மக்கள்தான் எங்களை ஆட்சியில் அமர்த்திய எஜமானர்களும், நீதிமான்களும். அவர்கள் நலனே எங்கள் முழுமுதல் நோக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,
அமைச்சர் செல்லூர் ராஜு, சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் மூலமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்து வருகிறார். அதேபோல் வளர்ச்சி பணிகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றார்.
மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள் என்றும் நீதிமான்கள் என்றும் கூறிய அமைச்சர், அவர்கள்தான் எங்களை ஆட்சியிர் அமர்த்தியவர்கள் என்றும் மக்கள் நலனே எங்கள் நோக்கம் என்றும் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியிலேயே தற்போதைய ஆட்சி நடைபெற்று வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரைப் போலில்லாமல் ஒரு அமைச்சரைப்போல் எளிமையாக இருப்பதாகவும் கூறினார். மக்கள் விரும்பக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
குடிமராமத்து பணிகள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது இதற்கு தமிழக அரசே காரணம் என்றார். ஆயிரத்து 519 நீர்நிலைகளைச் சுத்தம் செய்ததாலேயே அவை நிறைந்திருக்கின்றன என்றும் இதற்கு காரணம் அரசின் திட்டமிடுதல்தான் என்றும் கூறினார். ஆனால், அதனை தான் செய்ததாக மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் ஜோக் என்று சொல்லாமல் எங்களை மட்டும் கலாய்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.