அப்செட்டில் அமைச்சர் !! அண்ணனுக்கு சீட் கிடைக்காததால் அதிர்ச்சி !!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது அண்ணனுக்கு ஆரணி தொகுதியை எப்படியாவது வாங்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது அந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் அப்செட் ஆகியுள்ளார்.
அதிமுக பாஜக, மற்றும் பாமகவுடன் கூட்டணி வைப்பதை கடுமையாக எதிர்த்தவர் அமைச்சர் சி.வி.சண்முகம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை இந்தக் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் பாஜகவின் நெருக்குதல் காரணமாக கடந்த மாதத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து பாமக சார்பில் அதிமுகவினருக்கு ராமதாஸ் இல்லத்தில் விருந்த கொடுத்த போது கூட முதலில் அங்கு வர மறுத்த சண்முகம், பின்னர் எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்த பிறகுதான் அங்கு வந்தார்.
இந்நிலையில் ஆரணி தொகுதியில் தனது அண்ணனும் ‘நியூஸ் ஜெ’ சேனலின் பொறுப்பாளர்களில் ஒருவருமான ராதாகிருஷ்ணனை நிறுத்தத் திட்டமிட்டிருந்தாராம் சண்முகம்.
ஆனால், கூட்டணி ஒப்பந்தப்படி அந்தத் தொகுதி பாமக வசம் செல்கிறதாம். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் அப்செட்டில் இருக்கிறாராம் அமைச்சர். மேலும் தேர்தல் வேலைகளை செய்வதில் சுணக்கம்காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் சி.வி.சண்முகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.