மெர்சல் காட்சிகளை நீக்க தயார்... சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும்..- தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தகவல்...!
மெர்சல் திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது வேதனையளிக்கிறது எனவும் தேவை பட்டால் மெர்சல் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க தயார் எனவும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம்தான் மெர்சல்.
இந்த படத்தில் மத்திய அர்சு கொண்டுவந்த ஜி.எஸ்.டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல கணேசன், எஸ்.வி சேகர் ஆகியோர் குறிப்பிட்ட வசனங்களை நீக்க கோரி குரல் கொடுத்தனர்.
ஆனால் மெர்சல் படத்தில் உள்ள வசனங்களுக்கு மற்ற அரசியல் கட்சிகளும் திரையுலகினரும் பலத்த ஆதரவு தெரிவித்தனர்.
மெர்சல் படத்தில் காட்சிகள் நீக்கப்படுமா அல்லது நீக்கப்படாதா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில், மெர்சல் படம் யாருக்கும் எதிரானது அல்ல எனவும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் படமும் அல்ல எனவும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே மெர்சலின் கரு எனவும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் காட்சிகளை நீக்கவும் தயார் எனவும் முரளி தெரிவித்துள்ளார்.