இவ்வளவு கோடி செலவில் ஜெ.வுக்கு நினைவு மண்டபம்! ஓராண்டில் கட்டி முடிக்க திட்டம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை, மெரினாவில் நினைவு மண்டபம் கட்ட, பிப்ரவரி 7 ஆம் தேதி டெண்டர் விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று நினைவு மண்டப அடிக்கல் நாட்ட திட்டமுள்ளதாகவும், ஓராண்டுக்குள் நினைவு மண்டபம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்காக உலக அளவில் சிறப்பாக செயல்படும் நிபுணர்களிடம் வரைபடம் கேட்டுள்ளதாகவும், அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து நினைவு மண்டபம் கட்டப்படும
என்றும் அப்போது கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பது தொர்பாக வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று டெண்டர் விடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
43.63 கோடி அல்லது அதற்கு குறைவாக டெண்டர் கோருவோருக்கு டெண்டர் நிர்ணயம் செய்யப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று நினைவு மண்டப அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், ஜெயலலிதா நினைவு மண்டம் வரும் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.