நிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது, நாட்டில் நடக்கம் ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே குறை சொல்வதை மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாகத் தெரிவித்தார்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.3சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்)அறிவித்திருந்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ பிரதமர் மன்மோகன் ஆட்சியிலும், ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோதுதான் தேசத்தின் பொருளாதாரம் மோசமானது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி தரும்விதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளில் இருந்து பாடம்கற்றுக்கொண்டு, நம்பகத்தன்மையான தீர்வுகளை வழங்க வேண்டும். தவறுகளில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாடம் கற்றுக்கொண்டதா. நிரவ்மோடி உள்ளிட்ட மற்ற மோசடியாளர்கள் வங்கியின் பணத்தையும், மக்களின் பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்லாமல் தடுத்ததா, அல்லது வங்கியி்ல சூழலை மோசத்தில் இருந்து படுமோசத்துக்கு செல்லவதை தடுத்ததா
அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுக்கெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம் என்று கூற முடியாது. நீங்களும் போதுமான அளவு 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்துவிட்டீர்கள்,மக்கள் நலனுக்காக ஏதாவது நம்பகத்தன்மையான விஷயங்களை செய்ய உறுதிசெய்ய வேண்டும். அனைத்துப்பிரிச்சினைகளுக்கும் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று சொல்வதால், இந்தியாவின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை என் ஆட்சியில் என்ன நடந்ததோ அது நடந்தது. சில பலவீனங்களும் இருந்தன. ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஐந்தரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது, நாங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பொருளாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நம்பகத்தன்மையான தீர்வுகளை வழங்க வேண்டும்.
சில விஷயங்கள் செய்தமைக்காக நீங்கள் பாராட்டைப் பெறலாம், இந்த தேசத்தில் துன்பத்தில் இருக்கும் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வும் காணவில்லை.
உங்களின் அரசில் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு ஆண்டு மோசமாகி வருகிறது, இதில் 2024-ம் ஆண்டு 5 லட்சம் டாலர்பொருளதாாரத்தை எட்டுவதற்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. மத்திய அரசின் அக்கறையின்மை, திறமையின்மை ஆகியவற்றால் எதிர்காலத்தை பாதித்து லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைத்துவிடும். நாட்டின் பொருளாதார சூழலை மோடி அரசு கெடுத்துவிட்டது, இரட்டை இஞ்சின் பொருளாதாரம் தோல்வி அடைந்துவிட்டது
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்