தினகரனுக்கு சம்மட்டி அடி! முதலமைச்சர் எடப்பாடி பேச்சு!
அதிமுக இயக்கத்தை உடைத்துவிடலாம், கலைத்து விடலாம் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திற்கு வந்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தற்போதைய ஆட்சி மக்களாட்சியாகவே செயல்படும் எனவும் இயக்கத்தையும் ஆட்சியையும் வெற்றிப்பாதையில் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தார். ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப இயக்கம் உள்ளது எனவும் முழு வெற்றியையும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கு அர்பணிக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக தொண்டர்களை கண்ணை இமை காப்பதுபோல காத்து வந்த நிலையில், அதனை நாங்களும் செய்வோம் என்று கூறினார். அத்தனை தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
அதிமுக இயக்கத்தை உடைத்துவிடலாம், கலைத்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு உள்ளது என்றார். எதிர்கட்சியினரோடு சேர்ந்து சதி செய்தவர்களுக்கெல்லாம் ஆண்டவன் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளான். நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இங்கு கூடியுள்ளோம்.