முதன் முறையாக அரசுப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. தொடங்கி வைக்கிறார் எடப்பாடி !!
சென்னை எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை, வரும் 21ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இதே போன்று அரசுப் பள்ளிகளில் எல்கேஜி. யுகேஜி வகுப்புகள் தொடங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வரும் கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை உயர்த்தும் வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் 4கி.மீ. சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மாநில அளவில் 2,381 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் அவற்றின் அருகே உள்ள அங்கன்வாடிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகளுடன் இணைக்கப்படும் அங்கன்வாடிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கி மழலையர்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.7 கோடியே 73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை உறுதிபடுத்தும் வகையில், வரும் 21ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், அடுத்த கல்வியாண்டு முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.