அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம் ! இபிஎஸ் – ஓபிஎஸ்க்கு எதிராக கம்பு சுத்தும் கிருஷ்ணசாமி !!
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது படம் மற்றும் கொடியை அதிமுகவினர் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் புதிய தமிழகத்தின் ஆதரவு என்பது அதிமுகவுக்கு ஒரு பொருட்டு அல்ல எனும் நிலைமைதான் உள்ளது. ஆனால், தென் மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு பத்து சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது.
வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய வாக்கு வங்கியாக தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள் இருக்கின்றன. ஆனாலும் அதிமுக தலைவர்கள் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை சந்திக்கவோ, பரப்புரைக்கு அழைக்கவோ இல்லை.
ஏனெனில் நாங்குநேரியில் தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளுக்கு இணையாக தேவர் இன வாக்குகளும் உள்ளன. டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக சார்பாக பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தால், தேவர் இன வாக்குகள் முழுமையாக தமக்கு விழுமா என்று அதிமுக சந்தேகப்படுகிறது. இதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமியை இன்னும் அதிமுக தலைவர்கள் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த தகவல் கிருஷ்ணசாமியை எட்டியதும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இதையடுத்துதான் எங்களது கோரிக்கைகளை அதிமுக ஏற்காமல் ஏமாற்றிவிட்டது. அதனால் புதிய தமிழகத்தின் ஆதரவு அக்கட்சிக்கு இல்லை என இன்று அதிரடியாக அறிவித்தார்.