அமைச்சர்கள் வாயை மூடுங்கள் - நீட் குறித்து நீதிபதி கடும் கண்டனம்...
நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் வரை அமைச்சர்கள் வாயை திறக்காமல் இருப்பது நல்லது என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி நீட் தேர்வையும் மத்திய அரசு நடத்தி முடித்தது. ஆனால் தமிழக அமைச்சர்கள் நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு கிடைக்கும் என கூறி மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தது.
இதனால் மாணவர்கள் நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடக்காது என நினைத்து நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லிக்கும் சென்னைக்கும் மாறி மாறி பறந்து கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் உறவினர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் ஒரு அவசர பீதியை கிளப்புவார்கள். அதுபோன்று அமைச்சர்கள் மாணவர்கள் மனதில் திகிலை ஏற்படுத்தினார்கள் என்றே கூறலாம்.
இதையடுத்து உச்சநீதிமன்றம் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என கூறி கையை விரித்தது. இதனால் அமைச்சர்களும் அந்தர் பல்டி அடித்து மருத்துவ கலந்தாய்வை நீட் மூலம் நடத்தி முடித்தனர்.
இதனால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் அரங்கேறின.
இருந்தாலும் நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் அரசுக்கு பல கடும் கண்டனங்களை முன் வைத்தார்.
அதாவது, நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஒரு உயிரை இழந்துவிட்டோம் எனவும், இனிமேல், நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் கொடுக்காதீர்கள் எனவும் தெரிவித்தார்.