மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு..! ஓராண்டில் நடந்த மாற்றங்களும் காமெடிகளும்..!
தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாள் செப்டம்பர் 22. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 22. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் நடந்த அரசியல் மாற்றங்களும் ஆட்சியாளர்கள் செய்த காமெடிகளும் மறக்க முடியாதவை. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு தமிழகம் அவரைப் பார்க்கவில்லை. மருத்துவமனையில் உலகத்தர சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் விரைவில் உடல்நலம் பெற்று திரும்பிவிடுவார் எனவும் மருத்துவமனையிலிருந்து அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் கூட அதே கருத்தை தெரிவித்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் அவரது புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது? என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன? என எதுவுமே தெரியாமல் அதிமுக தொண்டர்களும் மக்களும் திகைத்தனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி ஏராளமான பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தினர். ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டும் என தமிழகமே பிரார்த்தனை செய்தது. ஆனால், மருத்துவ சிகிச்சையோ மக்களின் பிரார்த்தனையோ கைகொடுக்கவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5-ம் தேதி இரவு ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தமிழகமே கதறி அழுதது.
அதன்பிறகு முதல்வராக பன்னீர்செல்வமும் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததால் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்துவிட்டு, சசிகலா மீது குற்றம்சாட்டி கட்சியிலிருந்து பிரிந்தார்.
பன்னீர்செல்வத்துக்கு சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். மற்ற எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வம் பக்கம் சென்றுவிடாமல் இருக்க அனைவரும் கூவத்தூரில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். சசிகலாவின் முதல்வர் கனவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதை முன்கூட்டியே அறிந்த சசிகலா, பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தார். மற்ற எம்.எல்.ஏக்களும் சசிகலாவின் உத்தரவுப்படி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடர்ந்தார் முதல்வர் பழனிச்சாமி. அதன்பிறகு, தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், கட்சி தொண்டர்கள் அனைவரும் தங்களுக்குத்தான் ஆதரவு அளிப்பதாகவும் பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தை நாடினர். இதனால் சின்னத்தையும் கட்சிப் பெயரையும் முடக்கியது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணி சார்பில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இதுவரை சின்னம் தொடர்பான எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. அதுவரை இரு அணிக்கும் தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக கட்சிப் பெயர்கள் வழங்கப்பட்டன.
முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அணி அதிமுக அம்மா அணி என்றும் பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் அறிவிக்கப்பட்டன.
அதன்பிறகு பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன. இரு அணிகளும் இணைந்து தினகரனையும் சசிகலாவையும் ஓரங்கட்டினர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர், முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதால் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். இருக்கும் எம்.எல்.ஏக்களை வைத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடினர். ஆனால் சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை தற்போது வரை காப்பாற்றிவிட்டனர் என்றாலும் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. மக்களின் அதிருப்தி அடுத்த தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். இறுதியாக தற்போது இரு அணிகளும் இணைந்து பொதுக்குழு நடத்தி சசிகலாவையும் தினகரையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டு அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். தாங்களே உண்மையான அதிமுக என்பதால், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளனர். தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும் என கோரிய தினகரன் தரப்பும் விரைவில் ஆவணங்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னமும் கட்சிப்பெயரும் யாருக்கு ஒதுக்கப்படும் என்பதை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இப்படி அதிமுக கட்சியில் உட்கட்சி பிரச்னைகளும் ஆட்சியைக் காப்பாற்ற தினமும் போராடுவதும் என ஒவ்வொரு நாளும் ஆட்சியாளர்களுக்கு பெரும் போராட்டங்களுடன் நகர்கிறது. இதற்கிடையில் பல்வேறு காமெடிகளும் அரங்கேறியுள்ளன. இத்தனை நிகழ்வுகளும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதிக்குப் பிறகே அரங்கேறின.
அந்த வகையில் தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நினைவாக மாறிய நாள் செப்டம்பர் 22 - ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்.