அரசியலை விட்டு ஓட்டமாய் ஓடிட இ.பி.எஸ். தயாரா?: கேட்டாரே ஒரு கேள்வி! அது யாரு?
அற்ப ஆசைகளுக்காக நம் இயக்கத்தை விட்டு தாவி ஓடிய சிலரின் துரோகத்தினால் நம் இயக்கத்தை எதுவும் செய்துவிட முடியாது.
*அயோத்தி விவகார வழக்கின் இறுதி நாளான நேற்று, இந்து மகா சபை கொடுத்த ஆதார ஆவணங்களை இஸ்லாமியர் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் தவான் கிழித்து எறிந்தார். உடனே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “வழக்கறிஞர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நாங்கள் இங்கிருந்து அகன்றுவிடுவோம். இப்படிப்பட்ட செயல்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்குமே தவிர, பலன் ஏற்படுத்தாது. நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும்.” என்று கடுமை காட்டினார். - பத்திரிக்கை செய்தி
* நான் அதிபரானால், போர்க்குற்றச்செயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிங்கள போர்ப்படையினர் அனைவரும் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவர். இலங்கைப் போர்க்குற்றங்கள் குறுஇத்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும். - கோத்தப்பய ராஜபக்ஷே (ராஜபக்ஷேவின் சகோதரர்)
* ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய போர்க்குற்றங்களும், அக்கிரமங்களும் உலகம் அறியும். அப்படிப்பட்ட ஒரு போர்க்குற்றவாளியான கோத்தப்பய, அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, திமிர்த்தனமாக பேசி, சிங்கள இனவெறியை தூண்டுகிறார். இது தமிழர்களை அச்சுறுத்தும் செயல். அவர் வெற்றி பெற்று அதிபரானால், இலங்கையில் தமிழர்கள் வாழவே முடியாத நிலை உருவாகும். - டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)
* துரோகமே வடிவான, சூது மதியாளர்கள், ஆட்சியையும், கட்சியையும் தங்களின் சுயலாபத்துக்காக அடகு வைத்து, ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டனர். இந்த சூழ்நிலையில் கட்சியையும், தமிழகத்தின் நலன்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பை காலம் நம் கைகளில் வழங்கியுள்ளது. அற்ப ஆசைகளுக்காக நம் இயக்கத்தை விட்டு தாவி ஓடிய சிலரின் துரோகத்தினால் நம் இயக்கத்தை எதுவும் செய்துவிட முடியாது. - டி.டி.வி.தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)
* தி.மு.க.வில் உழைப்பால் ஸ்டாலின் தலைவரானார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்., விபத்தால் முதல்வரானார்! என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அடுத்த சட்டசபை தேர்தலின் மூலம் ஸ்டாலின் முதல்வராவது உறுதி.- உதயநிதி (தி.மு.க. இளைஞரணி செயலாளர்)
* முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய, நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை கைது செய்து விசாரணை நடத்திட தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும். - ராஜேந்திர பாலாஜி (பால் வளத்துறை அமைச்சர்)
* இரு தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பின் சீமானை கைது செய்யலாமென அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. காரணம், இப்போது கைது செய்தால் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அவர்களின் பேச்சுக்களால் கவரப்படும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிப்பர், இதனால் தோல்வி நேரலாம்! என்பதே கணக்கு. - தமிழக காங்கிரஸார்.
* நாங்குநேரியின் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்க்காரர்! என்று விமர்சிக்கிறார் முதல்வர் எடப்பாடி. அப்படியானால் பர்கூர், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் போட்டியிட்டாரே ஜெயலலிதா. அவர் எந்த ஊர்க்காரர்?-கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)
* இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஸ்டாலினுக்கும், பா.ம.க.வுக்கும் இடையில் நடக்கும் நேரடி போட்டியாக நான் கருதுகிறேன். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சுட்டிக் காட்டும் வேட்பாளர்தான் விக்கிரவாண்டியில் வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் முகத்தில் கரியை பூச வேண்டும். -அன்புமணி (பா.ம.க. இளைஞரணி செயலாளர்)
* சுவிஸ் நாட்டு வங்கியில் பணத்தை நான் பதுக்கியுள்ளேன் என முதல்வர் இ.பி.எஸ். கூறியுள்ளார். அதை அவர் நிரூபிப்பாரா? இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஓட அவர் தயாரா? லஞ்சம், ஊழலில், கொள்ளையடிப்பதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்துள்ளது அ.தி.மு.க. -மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)