அய்யா நல்லவரு, சொத்துக்களை அபகரிக்க என் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டாங்க... காடுவெட்டி குரு மனைவி பகீர் தகவல்
என்னுடை கணவரின் சொத்தை அபகரிக்க மகளை விருப்பமில்லாமல் தனது கணவரின் உறவினர் மகனுக்கு திருமணம் செய்துள்ளதாக காடுவெட்டி குருவின் மனைவி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்ட நிலையில் அவரது சொத்து யாருக்கு சொந்தம் என்பது குறித்த பிரச்சனை கடந்த சில மாதங்களாக இருந்துவந்தது. இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகைக்கும் காடுவெட்டி குருவின் தங்கை சாவித்திரி மகன் மனோஜ்க்கும் திடீரென்று நேற்று திருமணம் நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்ள மனோஜ் கிரண் வீட்டில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு விருதாம்பிகை தனது கணவர் மனோஜ் கிரணுடன் சாமி மலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய போது தான் அவருக்கு திருமணம் நடைபெற்ற தகவல் வெளியானது.
திருமணம் முடிந்த கையோடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு நேராக சென்ற விருதாம்பிகை தனது தந்தை சமாதியில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தனது தந்தை வாழ்ந்த வீட்டிற்கு விருதாம்பிகை தனது கணவர் மனோஜூடன் செல்ல முயன்ற போது தான் பிரச்சனை ஆனது. காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த சில ஊர்ப் பெரியவர்கள் விருதாம்பிகை மற்றும் மனோஜை அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் தனது பெற்றோரின் வீட்டிலிருந்த காடுவெட்டி குருவின் மனைவி இன்று காடுவெட்டி கிராமத்திற்கு வந்து குருவின் சமாதியில் தனது மகளின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து விட்டதாக கூறி அழுது புலம்பினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு எதிராக எனது மகன் மற்றும் மகளை எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் திருப்பிவிட்டுள்ளனர். எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாமல் எனது மகள் விருத்தாம்பிகைக்கும் எனது கணவரின் தங்கை சாவித்திரியின் மகன் மனோஜ்க்கும் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் முறைப்படி எனது கணவரின் சொத்துக்கள் அனைத்தும் எனது மகனுக்கு சொந்தம் அவனின் பெயரிலேயே சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். சொத்துக்காக எனது குடும்பத்தை என்னை விட்டு பிரிக்க பார்ப்பதாக குருவின் தங்கை சாவித்திரியின் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டினார்.
உடல்நிலை சரியில்லாமல் எனது பெற்றோரின் வீட்டில் இருந்தபோது மருத்துவமனைக்கான அனைத்து செலவுகளையும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பார்த்துக் கொண்டனர் எனக் கூறினார்.