திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் வேலுமணி வீட்டில் தான் ரெய்டு ! ஸ்டாலின் அதிரடி பேச்சு !!
உள்ளாட்சியில் கொள்ளை அடிக்க உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஏமாற்றி வரும அமைச்சர் வேலுமணி வீட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் நேற்று திறந்த வேனில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தல் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். மோடி பிரதமராக இருந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்கிறது. ராகுல் பிரதமரானவுடன் இந்த ஆட்சி நிலைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
திமுக, காங்கிரசை சேர்த்து 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். ஏற்கனவே நடந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். தற்போது சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலிலும் 100 சதவீதம் நாம்தான் வெற்றி பெறுவோம்.
இதன் மூலம் நாம் 119 எம்.எல்.ஏ.க்களை பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம். அதனால்தான் தற்போது 3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுத்து, புதிய சதித்திட்டம் போட்டுள்ளனர். அந்த சதியை முறியடிப்போம் என ஸ்டாலின் கூறினார்..
எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதலமைச்சர் ஆக்கியதும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். துணை முதலமைச்சர் ஆனதும் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.
திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் நான் மக்களை சந்தித்தபோது சில தாய்மார்கள் என்னிடம் ‘ஜெயலலிதா மரணத்துக்கான காரணத்தை கண்டறிந்து பாவிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்று கூறினார்கள். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்த மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் தள்ளுவோம் என தெரிவித்தார்..
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், முதல் ரெய்டு அமைச்சர் வேலுமணி வீட்டில்தான். எடப்பாடி பழனிசாமி அவரை பார்த்து பயப்படுகிறார். உள்ளாட்சிகளில் பணத்தை கொள்ளையடிக்கவே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர் என ஸ்டாலின் கடுமையாக பேசினார்.